தலித் இளைஞரை காதலித்து திருமணம்... பெற்ற மகளை உயிரோடு எரித்துக்கொன்ற பெற்றோர்..!

By vinoth kumarFirst Published Oct 14, 2019, 5:14 PM IST
Highlights

ஆந்திராவில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை அவரது பெற்றோர் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை அவரது பெற்றோர் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்ல பல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி அமராவதி. தம்பதியினரின் மகள் சந்தனா (17). அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஒட்டுமரி பகுதியை சேர்ந்த சீனிவாசலு, பத்மம்மா தம்பதியினரின் மகன் பிரபு (19), கட்டிட மேஸ்திரி. சந்தனாவும், பிரபுவும் பள்ளியில் படிக்கும் போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் சந்தனா வீட்டிற்கு தெரியவந்தது. இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இதனையடுத்து, பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கடந்த 11-ம் தேதி கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, இருவீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஊர் தலைவர்கள் தலையிட்டு காதல் ஜோடியை அவரவர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பிரபுவை மறந்து தங்களுடன் இருக்குமாறு பெற்றோர் அவரை வற்புறுத்தினர். ஆனால் சந்தனா பிரபுவுடன் தான் வாழ்வேன் என்று அடம்பிடித்தார்.

இந்நிலையில் சந்தனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது சடலத்தை குடும்பத்தினர் எரித்தனர். பின்னர், எரிக்கப்பட்ட சந்தனாவின் அஸ்தியை மூட்டையில் கட்டி யாருக்கும் தெரியாமல் ஏரியில் வீசினர். மனைவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் பிரபு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனாவின் பெற்றோரை விசாரணை நடத்தியதில் வேறு  சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் ஆணவ கொலை செய்து உடல் எரிக்கப்பட்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, பெண்ணின் பெற்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!