#UnmaskingChina: தேசத்தின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்வார்.! சர்வேயில் 73.6% இந்தியர்கள் மோடிக்கு ஆதரவு

By karthikeyan VFirst Published Jun 23, 2020, 10:25 PM IST
Highlights

தேசத்தின் பாதுகாப்பிலும் சீனாவுடனான எல்லை விவகாரத்தை கையாள்வதிலும் பிரதமர் நரேந்திர மோடி மீது இந்தியர்கள் அதீத நம்பிக்கை வைத்திருப்பது சி-வோட்டர் சர்வேயின் மூலம் தெரியவந்துள்ளது. 
 

சீன ராணுவம் கடந்த 15ம் தேதி இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில், சீன ராணுவ வீரர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியானாலும், சீன தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு, 2 ராணுவ உயரதிகாரிகள் தங்கள் தரப்பில் உயிரிழந்திருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனாலும் மொத்தமாக எத்தனை சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

Latest Videos

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனா, தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவுடன் மேலும் மோதலை விரும்பவில்லை என பம்மியது. ஆனால் அதேவேளையில், இந்தியாவின் குரல் வலுத்து ஒலித்தது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு தான். ஆனாலும், இந்தியா அதன் இறையாண்மையையும் ஒற்றுமையையும் காப்பதற்காக, எதையும் செய்யும் என்று கெத்தான தொனியில் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. 

சீனாவின் அத்துமீறலையடுத்து, சீனாவுடனான ராணுவ ரீதியான மற்றும் வர்த்தக ரீதியான அணுகுமுறையை முழுவதுமாக மாற்றியுள்ளது இந்திய அரசாங்கம். சீன ராணுவம் தாக்குதல் நடத்தினால், இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதற்கு முழு சுதந்திரமும், களச்சூழலின் அடிப்படையில், சுயமாக முடிவெடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல சீனாவுடனான வர்த்தகத்திலும் கண்டிப்பு காட்ட தொடங்கியுள்ள இந்தியா, சீன முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்க தொடங்கியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதை குறைக்கும் வகையில், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற பொருட்களை தடை செய்யும் நோக்கில், சீன பொருட்களின் தரத்தை ஆராயுமாறு உத்தரவிட்டுள்ள இந்திய அரசு, சீன மற்றும் இந்திய(உள்நாட்டு உற்பத்தி) பொருட்களுக்கு இடையேயான விலை வித்தியாசத்தை ஆராயுமாறும் உத்தரவிட்டுள்ளது. தரம் குறைந்த சீன பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்து, அதன்மூலம் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த முடிவு செய்துள்ளது. 

இவ்வாறு சீனாவுடனான விவகாரத்தில், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, திடமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனாலும் எதிர்க்கட்சியான காங்கிரஸும், ராகுல் காந்தியும், சீனா விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்துவருகின்றனர். இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததா என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு, இல்லை என்ற பதிலை இந்திய அரசாங்கம் தரப்பில் அளித்த பிறகும், இந்த விவகாரத்தையும் வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்துவருகிறது. 

இந்நிலையில், சீனாவுடனான விவகாரத்தை பிரதமர் மோடியின், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கையாண்ட விதம் மற்றும் தேச பாதுகாப்பில் பிரதமர் மோடியின் மீதான மக்களின் நம்பிக்கை குறித்த CVoter சர்வேயில், இந்திய மக்கள், பிரதமர் மோடியின் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

அந்த சர்வேயில், இந்தியாவிற்கு எல்லை விவகாரத்தில் சீனா தான் பெரும் கவலையளிப்பதாகவும் சவாலாக திகழ்வதாகவும் 68% மக்களும் பாகிஸ்தான் என 32% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக 73.6% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 16.7% மக்கள் மட்டுமே எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர். 9.6% மக்கள் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என இருதரப்பையும் நம்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வேயின் படி, 61% மக்கள் ராகுல் காந்தியின் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளனர். முந்தைய காங்கிரஸ் அரசின் வெளியுறவுக்கொள்கை மீதும், ராஜாந்திர ரீதியான உறவை பலப்படுத்துவதில் தோற்றுவிட்டதாகவும், அதனால் காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் நம்பிக்கையில்லை என்று 61% மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேச பாதுகாப்பில் 72.6% இந்தியர்கள் பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 14.4% பேர் மட்டுமே ராகுல் காந்தியை நம்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

கல்வான் தாக்குதல் சம்பவத்தை இந்திய அரசு திடமான நடவடிக்கைகளை எடுத்து சிறப்பாக கையாண்டதா என்ற கேள்விக்கு, 39% இந்திய மக்கள் ஆம் என்றும். 60% பேர் சீனாவிற்கு சரியான பதிலடி கொடுக்கப்படவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீன பொருட்களை புறக்கணிப்பது குறித்த சர்வேயில், 68% இந்தியர்கள் சீன பொருட்களை புறக்கணிப்பதாகவும் 31% பேர் சீன பொருட்களை புறக்கணிக்க மாட்டோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

click me!