
மத்திய அரசு ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், கடந்த 18-ந்தேதி வரை வங்கியில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக இதுவரை ரூ.33 ஆயிரத்து 6 கோடிதான் மக்கள் மாற்றி, புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக, சில்லறையாகப் பெற்றுச் சென்றுள்ளனர்.
ஆனால், நாட்டில் ஏறக்குறைய 17 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ1000 நோட்டுகளில், இன்னும் ரூ12 லட்சம் கோடி வர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், கடந்த 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை வங்கிகளில் ரூ.5.44 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது.
அறிவிப்பு
நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி ரூ.500, ரூ1000 நோட்டுகளை தடைசெய்து கடந்த 8-ந் தேதி அறிவித்தார்.
ரூ.17 லட்சம்கோடி
நாட்டில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளாக மக்களிடத்தில் ரூ.17.54 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. 85 சதவீதம் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களை ஒரு நாள் இரவில் மத்திய அரசு தடை செய்ததன் காரணமாக மக்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகின்றனர்.
மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள், தபால்நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற நீண்ட வரிசையில் காத்திருந்து மாற்றி வருகின்றனர்.
85 சதவீதம்
இதில் 85 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளில் 45 சதவீதம் ரூ.500 நோட்டுகள். இதன் மதிப்பு மட்டும் ரூ.7.89 லட்சம் கோடி. ரூ.1000 நோட்டுகள் 39 சதவீதம் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.6.84 லட்சம் கோடி.
ரிசர்வ் வங்கி
இந்நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று ஒர் அறிக்கை வெளியிட்டது. அதில் “ கடந்த 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை மக்கள் தங்களின் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றியும், டெபாசிட் செய்தும் வருகின்றனர். அந்த வகையில் இதுவரை வங்கிகளில் ரூ. 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடிக்குடெபாசிட் வந்துள்ளது. இதில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய வகையில் ரூ. 33 ஆயிரத்து 6 கோடியும், டெபாசிட்களாகரூ. 5 லட்சத்து 11 ஆயிரத்து 565 கோடி வரப்பெற்றுள்ளது.
மேலும், இந்த 9 நாட்கள் இடை வௌியில் மக்கள் ஏ.டி.எம். மற்றும் வங்கிகளில் இருந்து ரூ. ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 316 கோடி பெற்றுள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆழமாகப் பார்த்தால், மத்திய அரசின் எண்ணம் ரூ.500, ரூ1000 நோட்டுகளை தடைசெய்தால், கருப்பு பணம், கள்ளநோட்டுகள் ஒழிக்கப்படும் என்று திட்டமிட்டு இந்த அறிவிப்பைச் செய்தது.
ரூ.33 ஆயிரம் கோடி மட்டுமே
ஆனால், ரூ.17.54 லட்சம் கோடி இருந்த ரூ.500,ரூ.1000 நோட்டுகளில், இதுவரை ரூ. 5 லட்சத்து 44 ஆயிரத்து 571 கோடி மட்டுமே வங்கிகளுக்கு வந்துள்ளது. அதில், ரூ.33 ஆயிரத்து 6 கோடிக்கு மட்டுமே மக்கள் 100 ரூபாயாக, 2 ஆயிரம் ரூபாயாக, சில்லறைகளா பெற்றுச் சென்றுள்ளனர். ஆக, இன்னும் வங்கிகளுக்கும் ஏறக்குறைய ரூ.12 லட்சம் கோடி ரூ.500, ரூ1000 நோட்டுகளாக வர வேண்டும்.
ரூ.12 லட்சம்கோடி
ஆக, மக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூ.5.44 லட்சம் கோடி வங்கியில் முடக்கப்பட்டுவிட்டது. அதாவது, இன்னும் நாட்டில் ரூ.12 லட்சம் கோடி ரூ.500, ரூ1000 நோட்டுகள் சுற்றிக்கொண்டும், அல்லது பதுக்கப்பட்டும் இருக்கிறது.
15 சதவீதம்
மிக சொற்பமாக, 15 சதவீதம் மட்டுமே புழக்கத்தில் இருந்துவந்த குறைந்த மதிப்புடைய ரூ5, ரூ.10, ரூ.20 ரூ.50 ரூ.100 நோட்டுகள், மற்றும் தற்போது வெளியான ரூ.2ஆயிரம் நோட்டுகளைத் தான் 125 கோடி மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகத் தான் மக்கள் செலவுக்கு பணம் இல்லாமல் கடும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி அறிவித்த டிசம்பர் மாதம் இறுதிக்குள் ரூ.12 லட்சம் கோடி பணமும் வங்கிகளிடத்தில் டெபாசிட் ஆகுமா, அல்லது அனைத்தும் பதுக்கப்பட்டுவிடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
பற்றாக்குறை
ஆனால், 17.54 லட்சம் புழக்கத்தில் இருந்த நிலையில், இதில் ரூ.5.44 லட்சம் கோடி இப்போது வங்கிக்கு வந்துவிட்டது. அதற்கு ஈடான தொகை, அதாவது புதிய ரூ.500, மற்றும் ரூ.2000 நோட்டுகளாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கப்படாததன் காரணமாகத்தான் இந்த அளவு பணப்பற்றாக்குறை நிலவுகிறது.