#UnmaskingChina:பெயர்தான் ராணுவம்,செய்வது எல்லாம் பேட்டை ரவுடி வேலை: வீரர்களை தாக்கிய சீன ஆயுதம் எது தெரியுமா?

By vinoth kumarFirst Published Jun 18, 2020, 12:39 PM IST
Highlights

லடாக் எல்லையில் ஏற்பட்ட திடீர் மோதலில் சீன தரப்பில் 35 வீரர்களும், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், சீனா இராணுவம் இந்திய வீரர்களை தாக்கியபோது பயன்படுத்திய இரும்பு ராட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

லடாக் எல்லையில் ஏற்பட்ட திடீர் மோதலில் சீன தரப்பில் 35 வீரர்களும், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், சீனா இராணுவம் இந்திய வீரர்களை தாக்கியபோது பயன்படுத்திய இரும்பு ராட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோங், தவுலத் பெக் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக இந்திய-சீனா ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. மே மாதம் முதல் வாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்ததால் எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் இருநாடுகளும் எல்லையில் தங்களது படைகளை குவித்து வந்தன.

இதனையடுத்து, ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இதையடுத்து கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளத் தொடங்கிய போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், கற்கள், இரும்பு ராடுகள் போன்றவற்றை பயன்படுத்தியே வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தத கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படை மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்திய படையும் கற்களை கொண்டு எதிர்தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி, மற்றொரு வீரர் குண்டன் குமார் ஓஜா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், படுகாயமடைந்த 17 பேர் உயரமான பகுதியில் பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் இருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ராணுவ தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின. அதேபோல், சீனா தரப்பில் ராணுவத்தின் மூத்த அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீனா இராணுவம்  இரும்பு கம்பிகள் மற்றும் கற்களால் தாக்கியதாக செய்தி வெளியான நிலையில் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனா இராணுவம் இந்திய வீரர்களை தாக்கியபோது பயன்படுத்திய இரும்பு ராட்டின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது, ராணுவத்தினருக்கான எவ்வித ஒழுங்கும் இன்றி பேட்டை ரவுடிகளைப் போல் சீன வீரர்கள் இரும்பு ராடை பயன்படுத்தியிருப்பது இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!