239 பேர் பலி..! இந்தியாவில் அசுர வேகம் எடுக்கும் கொடூர கொரோனா..!

By Manikandan S R SFirst Published Apr 11, 2020, 8:50 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 7,747 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 239 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 7 ஆயிரத்தை 500 ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 7,747 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 239 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது. அங்கு 1574 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருகின்றனர். 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அதற்கடுத்தபடியாக தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு பாதிப்பு உறுதியாகி எண்ணிக்கை 911ஐ எட்டியுள்ளது. 9 பேர் பலியாகி இருக்கின்றனர்.

டெல்லியில் 903 பேரும் ராஜஸ்தானில் 553 பேரும் தெலுங்கானாவில் 473 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 643 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை மேலும் நீடிக்க மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அது குறித்து பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து இன்று முக்கிய முடிவெடுக்க இருக்கிறார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே ஒடிசாவும் பஞ்சாப் மாநிலமும் இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!