ஒரே நாளில் 33 பேர் மரணம்..! இந்தியாவில் 199 ஆக அதிகரித்த கொரோனா பலி..!

Published : Apr 10, 2020, 08:58 AM IST
ஒரே நாளில் 33 பேர் மரணம்..! இந்தியாவில் 199 ஆக அதிகரித்த கொரோனா பலி..!

சுருக்கம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கும் நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. 

உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 6 ஆயிரத்தை 500 ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 6,412 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 199 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்கும் நிலையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு 1364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருகின்றனர். 97 பேர் பலியாகி இருக்கும் நிலையில் 125 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கடுத்தபடியாக தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 96 பேருக்கு பாதிப்பு உறுதியாகி எண்ணிக்கை 834 ஐ எட்டியுள்ளது. 8 பேர் பலியாகி இருக்கின்றனர். டெல்லியில் 720 பேரும் ராஜஸ்தானில் 463 பேரும் தெலுங்கானாவில் 442 பேரும் உத்தர பிரதேசத்தில் 410 பேரும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 504 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு வரும் 14 ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அதை மேலும் நீடிக்க மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதற்கான அறிவிப்பு அடுத்து வரும் நாட்களில் வெளியாகலாம். நேற்று ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் உத்தரவிட்டார். இதனால் இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Solar Subsidy: 300 யூனிட் இலவச கரண்ட், ₹78,000 மானியம்! மோடியின் இந்தத் திட்டத்தில் பயன் அடைவது..
LPG Cylinder Rules: சிலிண்டர் டெலிவரிக்கு காசு கேக்குறாங்களா? ரூல்ஸ் என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சிக்கோங்க!