ஒரே நாள்.. இத்தாலி-727, ஸ்பெயின்-667, பிரான்ஸ்-509..! ஐரோப்ப நாடுகளை அலற விடும் கொரோனா..!

By Manikandan S R SFirst Published Apr 2, 2020, 8:48 AM IST
Highlights

சீனாவை காட்டிலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி நேற்று ஒரே நாளில் 727 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். 

உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,312 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின்,ஈரான், அமெரிக்கா,பிரான்ஸ், இந்தியா என உலகின் 203 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.

சீனாவை காட்டிலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி நேற்று ஒரே நாளில் 727 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மொத்தமாக அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 13,155 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினில் 9,131  உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் அங்கு 667 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர்.

பிரான்சிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 509 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,032 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் அசுர வேகம் எடுத்திருக்கும் கொடூர கொரோனா வைரஸ் நேற்று ஒரே நாளில் 563 உயிர்களை பறித்திருக்கிறது. இதன்மூலம் அங்கு பலியானோர் எண்ணகை 2,352 ஆக உயர்ந்திருக்கிறது. அதே போல ஈரானில் 3,036 பேரும், அமெரிக்காவில் 4,394 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 9 லட்சத்து 28 ஆயிரத்து 65 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 837ஆக இருக்கிறது.

click me!