காங்கிரஸ் 80 முறை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியுள்ளது: நிதின் கட்கரி பகீர் தகவல்!

By Manikanda PrabuFirst Published May 10, 2024, 8:46 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் 80 முறை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியுள்ளதாக மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. நாடு முழுவதும் எற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் வாரங்களில் அடுத்தடுத்தக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பையே மாற்றி விடுவார்கள் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் 80 முறை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியுள்ளதாக மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று கூறி எதிர்க்கட்சிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். காங்கிரஸின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், நாட்டு மக்கள் ஏழைகளாகவே உள்ளனர் என நிதின் கட்கரி குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிர மாநிலம் பீட் மக்களவைத் தொகுதி வேட்பாளரான பங்கஜா முண்டேவுக்கு ஆதரவாக மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்கான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் மக்களை நம்பவைக்கத் தவறிவிட்டன. அதனால் அவர்கள் மக்களை குழப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் நாங்கள் (பாஜக) அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அரசியலமைப்பை மாற்ற முடியாது, திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. இதுவரை 80 முறை அரசியல் சட்டத்தில் காங்கிரஸ் திருத்தம் செய்துள்ளது.” என்றார்.

இடைக்கால ஜாமீன்: சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிப்பு!

கடைசி ஏழைக்கும் பயன் கிடைக்கும் வரை எங்கள் பணியை நிறுத்த மாட்டோம் என்ற நிதின் கட்கரி, “காங்கிரஸின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நாட்டில் மக்கள் ஏழைகளாக இருந்தனர். அவர்கள் எதையுமே செய்யவில்லை என நிதின் கட்கரி குற்றம் சாட்டினார். எனவே, அவர்கள் செய்த திட்டங்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடியவில்லை என்பதால், மக்களை குழப்ப முயற்சிக்கிறார்கள்.” என குற்றம் சாட்டினார்.

தேர்தலில் சாதி அல்லது மத அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அப்போது வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள பீட் மக்களவைத் தொகுதிக்கு மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் போட்டியிடும் பங்கஜா முண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) வேட்பாளர் பஜ்ரங் சோனாவனே இடையே இரு முனைப் போட்டி நிலவுகிறது.

click me!