
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத வகையில் மாற்றப்பட்ட பிரதமர் மோடியின் நடவடிக்கையால் காங்கிரஸ் தலைவர்கள் குவித்து வைத்த பல லட்சம் கோடி குப்பை தொட்டியில் குவிந்து போனது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
குஜராத் மாநிலம் பரூச் நகரில் பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் தலைவர் அமித்ஷா, பேசியதாவது.
பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிக்ன்றனர்.
காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஆதர்ஷ் வீட்டு ஊழல், விமானங்கள் வாங்குவதில் முறைகேடு என ஒவ்வொரு நாளும் ஒரு ஊழல்கள் நடந்தன. இதுபோன்ற மிகப்பெரிய ஊழல்கள் மூலம் 3 மடங்கு மத்திய பட்ஜெட்டுக்கு இணையான ரூ.12 லட்சம் கோடியை காங்கிரஸ் தலைவர்கள் குவித்தனர்.
இந்த பணத்தை காங்கிரசார் தங்களுடைய வீடுகள், குடோன்கள், நண்பர்களின் வீடுகளில் மிகவும் பத்திரமாக பதுக்கி வைத்தனர். அவர்கள் குவித்த அந்த பணம் எல்லாம் பிரதமர் மோடியில், அதிரடி நடவடிக்கையால் குப்பையாக மாறிவிட்டது.
500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.. அவர்களின் முகங்கள் வாடிவிட்டன. வெள்ளத்தில் அனைத்துமே அடித்துச் செல்வது போன்ற ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ரூ.4 ஆயிரத்தை மாற்றுவதற்காக ராகுல்காந்தி, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் வங்கிக்கு சென்றார்
தற்போது காங்கிரஸ் தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, முலாயம் சிங் போன்றோர் இந்த வெள்ளத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒன்று சேர்ந்துள்ளனர். எங்களிடம் கருப்பு பணம் கிடையாது. அதை வைத்திருப்பவர்கள்தான் கவலைப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.