உஷார் மக்களே... இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்... முதல்வரின் அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 9, 2021, 2:32 PM IST
Highlights

மகாராஷ்ட்ரா, கேரளா, கர்நாடகா, தமிழகம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானாவும் கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோரதாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தொற்று இடையில் சில மாதங்கள் குறைய ஆரம்பித்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் மீண்டும் முழு வீச்சில் செயல்பட ஆரம்பித்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் தன்னுடைய கோர முகத்தைக் காட்டி வருகிறது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி, நாட்டில் சவாலான சூழ்நிலை மீண்டும் உருவாகி வருகிறது என்றும் கொரோனா பரவலின் இரண்டாவது அலையை நாம் எதிர்த்து போராட வேண்டும் என்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானாவும் கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வரும் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது தெலங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை, காவல்துறைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 45 வயதைத் தாண்டிய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் சந்திர சேகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.  அத்துடன் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் வறுமையில் வாடும் தனியார் பள்ளி   ஆசிரியர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 25 கிலோ அரிசியும் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

click me!