
‘‘ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து குவித்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கப்போகிறதோ?’’ என, ஆந்திரா முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார்.
சசிகலா வழக்கு
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகால தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சியின் செயற்குழு கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
என்ன தண்டனை?
‘‘சட்டம், நீதிக்கு முன் அனை வரும் சமம் என்பதையே இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. தமிழக அரசியலில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமான கட்டத்தில் வெளியாகி உள்ளது.
முறைகேடாக ரூ.66 கோடி சொத்து குவித்தவர்களுக்கே 4 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் எனில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ள (ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர்) ஜெகன் மோகன் ரெட்டிக்கு எத்தனை ஆண்டுகாலம் சிறைத் தண்டனை கிடைக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது’’.
இவ்வாறு அவர் கூறினார்.