பால், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் விலை குறைகிறது ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அதிரடி முடிவு!

First Published May 18, 2017, 10:18 PM IST
Highlights
Cereals milk to be part of exempt list under GST Food grains to be cheaper for consumer post GST Rollout


ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை(ஜி.எஸ்.டி.) வரியில் இருந்து,  மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான பால், அரிசி, கோதுமை, பருப்பு வகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், காபி, டீத்தூள், சர்க்கரைக்கு  மிகக்குறைவாக 5 சதவீதம் வரியும், டூத்பேஸ்ட், தலைக்கு தேய்க்கும் எண்ணெய், சோப் வகைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.

நாடு முழுவதும் நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.

4 வகை வரி

இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரியாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையான பிரிவுகளில் வரி விதிக்கவும் ஜி.எஸ்.டி.கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

14-வது கூட்டம்

இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரியில் உள்ள 4 பிரிவு வரிகளான 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகியவற்றை எந்தெந்த பொருட்களுக்கு விதிப்பது குறித்து ஆலோசிக்க ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நகரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 14-வது ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது.

1,211 வகை பொருட்கள்

இந்த கூட்டத்தில் 1,211 வகையான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 6 பொருட்களைத் தவிர மற்ற பொருட்களுக்கான வரி வீதம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 80 முதல் 90 சதவீதம் பொருட்கள் 5 முதல் 18 சதவீதம் வரிக்குள் கொண்டு வரப்பட்டன.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் பின்வருமாறு.

டூத்பேஸ்ட், சோப் வரி குறைப்பு

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாக தலைக்கு தேய்க்கும் எண்ணெய், சோப், டூத்பேஸ்ட் ஆகியவற்றுக்கான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த பொருட்களுக்கு வரி 22 முதல் 24 சதவீத வரி மத்திய, மாநில அரசுகளால் கூட்டாக விதிக்கப்பட்டு வருகிறது.

விலக்கு

பால், தயிர் ஆகியவற்றுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை குறிப்பாக அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், இவற்றின் விலை ஜூலை மாதத்துக்கு பின் விலை குறையும். சில மாநிலங்களில் இந்த பொருட்களுக்கு வாட் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது இனி இருக்காது.

உயிர்காக்கும் மருந்துகள்

இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான சர்க்கரை, டீத்தூள், காபித்ததூள், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு மிகக்குறைவாக 5 சதவீதம் வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

உயிர்காக்கும் மருந்துகள் 5 சதவீதம் வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏ.சி.பிரிட்ஜ்

நுகர்வோர் பொருட்களான ஏ.சி. பிரிட்ஜ் ஆகியவை 28 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது இவற்றுக்கு 31 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

குளிர்பானங்கள்

குளிர்பானங்கள், கார்கள் 28 சதவீதம் வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ேமலும், இதில் காருக்கு ஜி.எஸ்.டி. வரியோடு சேர்த்து, ஒரு சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. நடுத்தர கார்களுக்கு 3 சதவீதம் கூடுதல் வரியும், சொகுசு கார்களுக்கு கூடுதல் வரியாக 15 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று முடிவு?

அதேசமயம், தங்கம், பீடி, செருப்பு, பிராண்டட் வகை பொருட்கள், பேக்கிங்செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கான வரி, மேலும், பல்வேறு சேவைகளுக்கான வரிகள் குறித்து இன்று தீர்மானிக்கப்படும்.

விலை உயர்ந்த தங்கத்தை பொருத்தவரை மாநிலங்கள் 4 சதவீதம் வரி விதிக்க கோரியுள்ளன.

18 சதவீத்துக்குள்

ஒட்டுமொத்தமாக 1200 வகை பொருட்களில் 7 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 14 சதவீத பொருட்களுக்கு மிகக்குறைவாக 5சதவீத வரியும், 17சதவீத பொருட்களுக்கு 12 சதவீத வரியும், 43 சதவீத பொருட்களுக்கு 18 சதவீத வரியும், 19 சதவீத பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், 81 சதவீத  பொருட்கள் 18 சதவீதம் வரிக்குள்ளாகவே கொண்டு வரப்பட்டுள்ளன.

 

click me!