
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு ஆபரேஷன் கங்கா என மத்திய அரசு சார்பில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டில் பெரும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இதைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க உலக நாடுகள் மாற்றுவழி குறித்து ஆலோசித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே அங்குச் சிக்கி உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வேறு வழிகளில் மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. உக்ரைன் நாட்டை சுற்றி உள்ள அண்டை நாடுகளின் உதவியுடன் அங்குள்ள இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டி இருந்தது. உக்ரைன் நாட்டில் இருந்து சாலை வழியாக ருமேனியா மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்காக ரஷ்யா மொழி பேசும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்தியர்களை வெளியேற்றும் பணிகளைத் தானே நேரடியாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். அதற்காக நேற்று இரு விமானங்கள் ஹங்கேரி மற்றும் ருமானியா நாடுகளுக்கு அனுப்பப்பட்டு இருந்தன.
இந்தச் சூழலில் உக்ரைனில் இருந்து ருமானியா சென்ற 219 இந்தியர்களுடன் ருமேனிய தலைநகர் புக்கரெஸ்ட்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக மும்பையில் தரையிறங்கி உள்ளது. உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களை விமானத்திலேயே சென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரவேற்றார். தாயகம் திரும்பிய பயணிகள் மகிழ்ச்சியில் ஜெய் ஹிந்த் முழக்கம் எழுப்பினர். இது தொடர்பான விடியோ இணையத்தில் டிர்ரெண்டிங்கில் உள்ளது. இதனிடையே உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு ஆபரேஷன் கங்கா என மத்திய அரசு சார்பில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்ரேஷன் கங்காவின் முதல் படி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். உக்ரைனில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட உடன், அவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.