உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா பகுதியில் இன்று அதிகாலை இன்னோவா கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 10 க்கும் அதிகமானோர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ஆற்றில் மூழ்கியது.
கண்முன்னே கார் ஒன்று ஆற்றுக்குள் மூழ்குவதைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள் பல மணி நேரம் போராடி மூழ்கிய காரை வெளியே எடுத்தனர்.
இருப்பினும் இவ்விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரேக் பிடிக்காததே விபத்து ஏற்படக் காரணம் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் யார், அவர்களது முகவரி என்ன என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆற்றில் கார் மூழ்கி 9 பேர் பலியான சம்பவம் மதுராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.