புல்லி பாய் ஆப் விவகாரம்... 12 ஆம் வகுப்பு மாணவி அதிரடி கைது... பின்னணியில் யார்?

By Narendran SFirst Published Jan 5, 2022, 5:44 PM IST
Highlights

புல்லி பாய் செயலியில் பெண்களை ஏலம் விட்டதற்காக 18 வயது இளம்பெண் மற்றும் 21 வயது மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார். 

புல்லி பாய் செயலியில் பெண்களை ஏலம் விட்டதற்காக 18 வயது இளம்பெண் மற்றும் 21 வயது மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளார். முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சுல்லி என்ற வார்த்தையை சிலர் பயன்படுத்துவதாக புகார் உள்ளது. சுல்லி டீல்ஸ் முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் வகையில் சுல்லி டீல்ஸ் என்ற சமூக வலைதளம் பயன்பாட்டில் இருந்தது. பலத்த எதிர்ப்பு எழுந்ததால் அதை, மத்திய அரசு கடந்தாண்டு முடக்கி வைத்தது. இந்நிலையில் முஸ்லிம் பெண்களை ஏலம் விடும் புல்லி பாய் என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பல முஸ்லிம் பெண்கள் புகார் அளித்து உள்ளனர். டில்லியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் இஸ்மத் ஆரா, சமூக வலைதளத்தில் புகார் கூறியிருந்தார். சிவசேனா கட்சியின் பிரியங்கா சதுர்வேதியும், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். பாஜகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் அந்தப் பதிவை அனுப்பியிருந்தார். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இணையதளத்தில் செயலிகளை பதிவு செய்யும் கிட்ஹப் தொகுப்பு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புல்லி பாய் சமூக வலைதளம் உடனடியாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது என, அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி, டில்லி போலீஸ் மற்றும் ஐசெர்ட் எனப்படும் கம்ப்யூட்டர் அவசரகால உதவி அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் படங்களை பதிவிட்டு, அவை ஏலத்துக்கு விடப்படுகின்றன. உண்மையில் அவர்கள் ஏலம் விடப்படாவிட்டாலும், ஏலத்தில் பதிவிட்டுள்ளதன் வாயிலாக, அவர்களை இழிவுபடுத்துவதே இந்த செயலியை உருவாக்கியவர்களின் நோக்கம். இந்த செயலியை முடக்கியதுடன், அதை உருவாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன் புகைப்படங்களை சில மர்ம நபர்கள் சர்ச்சைக்குரிய இணையதளத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாக டில்லி போலீசில் புகார் அளித்திருந்தார். ராகுல் காந்தி, சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்ட்ரா மாநிலங்களின் பல பகுதிகளிலும் புல்லி பாய் செயலி மீதும், அதன் நிறுவனர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னணியில் இருந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவரை போலீசார் பெங்களூரில் வைத்து கைது செய்தனர். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அவரிடம் மும்பை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்துத்வ ஆதரவாளரான விஷால் ஜா தன்னுடன் அரசியல் ரீதியாக முரண்பாடு கொண்ட பெண் ஆளுமைகளை பழிவாங்குவதற்காகவே அவர்களை ஏலம் விடுவதாக ஒப்புக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் இளம் பெண் ஒருவரும்,  மற்றொரு மாணவரும் இந்த செயலி தொடங்குவதில் துணையாக இருந்ததை கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, உத்தரகாண்ட் மாநிலத்தின் உதம்சிங் நகரைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண், அதே உத்தரகாண்டைச் சேர்ந்த 21 வயது மாணவர் மயங்க் ராவல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

click me!