
குஜராத்தில் பா.ஜனதா கட்சி செய்து வரும் தேர்தல் பிரசாரம் இயல்புக்கு மாறாக வினோதமாக இருக்கிறது, பயத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மோடி குற்றச்சாட்டு
குஜராத்தின் பாலன்பூரில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருக்கிறது. பாகிஸ்தான் அமைச்சர், தூதர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, உள்ளிட்டோர் மணிசங்கர் அய்யர் இல்லத்தில் ரகசியமாக 3 மணிநேரம் பேசினர் . இந்த கூட்டத்துக்கு மறுநாள், என்னை இழிவானவர் என மணிசங்கர் அய்யர் சாடினார்’’ என பேசினார்.
விளக்கம்
இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டு, அந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டன. மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தியுள்ளார்.
எந்த அளவுக்கும் செல்லும்
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது-
குஜராத் சட்டசபைத் தேர்தலில் கடந்த சில நாட்களாக பா.ஜனதா கட்சியின் பிரசாரம் குறிப்பாக நேற்று முன்தினம் முதல் இயல்புக்கு மாறாக, வினோதமாக இருக்கிறது. பயத்தை காட்டுகிறது தேர்தலில் வெற்றி பெற ஒரு கட்சி எந்த அளவுக்கும் செல்ல வேண்டுமா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.