
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதனை அடுத்து குஜராத்தின் நாரன்பூரா தொகுதி எம்.எல்.ஏ பதவியை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ராஜினாமா செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு நடைபெற்ற போது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர், தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பாஜக தலைவரிடம் காண்பித்தனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எங்களது கட்சி எம்எல்ஏக்கள் வாக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு வாக்களித்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என அறிவித்தது.
இதையடுத்து நள்ளிரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் தனக்கு தேவையான 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி ராணி ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதனை அடுத்து குஜராத்தின் நாரன்பூரா தொகுதி எம்.எல்.ஏ பதவியை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ராஜினாமா செய்துள்ளார்.