
சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்டத்தில் உள்ள பண்டாரியா சட்டமன்றத் தொகுதியில், 41 பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 125பேர் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாவனா போஹ்ரா அவர்களின் கால்களைக் கழுவி வரவேற்றுள்ளார்.
பழங்குடியினர் கலாச்சாரம் தொடர்பாக நியூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த 'கர் வாபசி' (வீடு திரும்புதல்) என்ற சடங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் பாவனா போஹ்ரா, மீண்டும் இந்து மதத்தைத் தழுவிய 125 பேரின் பாதங்களையும் கழுவி, அவர்களை வரவேற்றார்.
நியூர், அமனியா, கட்வானி, தம்கர் மற்றும் பிர்ஹுல்திஹ் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் இவ்வாறு மத மாற்றத்தைக் கைவிட்டு இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பாவனா போஹ்ரா, அதிக எண்ணிக்கையிலான மக்கள் தாமாக முன்வந்து தங்கள் பூர்வீக மதத்திற்குத் திரும்புவது குறித்துப் பேசினார்.
"சுமார் 41 குடும்பங்களைச் சேர்ந்த 125 உறுப்பினர்கள் இந்துமதத்துக்குத் திரும்பியுள்ளனர். இந்த முயற்சி தொடர்ந்து நடைபெறும். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கூட, 75 முதல் 80 பேர் இவ்வாறு இந்து மதத்துக்குத் திரும்பினர். இப்போது, நாங்கள் வனப் பகுதிகளில் இருக்கிறோம். மக்கள் தாங்களாகவே முன்வந்து எங்களைத் தொடர்புகொண்டு மீண்டும் தங்கள் தாய் மதத்திற்குத் திரும்புகிறார்கள்," என்று அவர் கூறினார்.
தங்கள் கலாச்சாரத்திற்குத் திரும்பவில்லை என்றால், பழங்குடியினரின் வளமான வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியாமல் போகும் என்பதைப் அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"பழங்குடியின சமூகத்தின் அடையாளம் என்பது காடு மற்றும் நிலத்துடன் பிணைக்கப்பட்டது. இவர்களின் அடையாளம் பஞ்சபூதங்களுடன் உள்ள பிணைப்புதான். இதிலிருந்தும் யாராலும் விலகி இருக்க முடியாது” என்று அவர் தெரிவித்தார்.