
கணவர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் தனது காதலனுடன் சத்தமில்லாமல் குடும்பம் நடத்தி வந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு வெளியேறி இளம்பெண்
பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் தினேஷ் ராம். இவர் சாந்தி தேவி என்ற பெண்ணை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில வருடங்களில் திடீரென சாந்திதேவி கடந்த மாதம் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
வரதட்சணை கொடுமை
இதனிடையே, சாந்தி தேவியின் தந்தை யோகேந்திர யாதவ் தனது மகளை அவரின் வீட்டிற்கு பார்க்க சென்றுள்ளார். அவர் அங்கு இல்லை என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, வரதட்சணைக் கொடுமையால் தினேஷ் ராம் கொன்றுவிட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மொபைல் சிக்னல்
ஆனால், இறந்ததாக கூறப்படும் சாந்தியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. உடலை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், போலீசார் சாந்தி தேவி பயன்படுத்திய மொபைல் போன் எங்கு இருக்கிறது என்பதை கண்காணிக்க ஆரம்பித்தனர். அந்த மொபைல் சிக்னல் பஞ்சாப்பின் ஜலந்தரில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் ஜலந்தருக்கு விரைந்து சென்றது. அங்கு தீவிர தேடுதலுக்கு பிறகு சாந்தி தேவி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. சாந்தி இறக்கவில்லை என்று தெரிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர் தனது காதலனுடன் ஜலந்தரில் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதும், அவரை போலீஸார் பீகாருக்கு அழைத்து வந்தனர். தற்போது சாந்தியின் கணவர் தினேஷ் சிறையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார். சாந்தி தேவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.