
பீகாரில் மொஹானியா சட்டமன்றத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) வேட்பாளர் ஸ்வேதா சுமன் தாக்கல் செய்த வேட்பு மனு இன்று (புதன்கிழமை) நிராகரிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கு இது ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) மற்றும் பிற அதிகாரிகள் டெல்லியின் அழுத்தத்தின் கீழ் செயல்பட்டதாக ஸ்வேதா சுமன் குற்றம் சாட்டியுள்ளார்.
கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வேதா சுமன், “தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மீது டெல்லியில் இருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த முடிவை எடுக்க அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். தாங்கள் வேறு வழியின்றி நிர்பந்திக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்... பா.ஜ.க., பிரதமர் மோடி, மற்றும் அமித் ஷா ஆகியோர் தான் இந்த அழுத்தத்தைக் கொடுத்தனர். வேறு யார் கொடுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிச்சயமாக நீதிமன்றத்திற்குச் செல்ல இருப்பதாகக் கூறிய ஸ்வேதா, "இங்குள்ள பா.ஜ.க. வேட்பாளர் சங்கீதா, அறிவிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு தனது சாதிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார். ஆனால் அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது" என்று சாடினார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சௌகாலி சட்டமன்றத் தொகுதியில், 'இந்தியா' கூட்டணியின் மற்றொரு வேட்பாளரான விஐபி (VIP) கட்சியின் சசி பூஷன் சிங் தாக்கல் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் பீகாரில் இக்கூட்டணிக்கு அடுத்தடுத்து பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.
மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று அறிவிக்கப்படும்.