
“பீகார், உத்தரப்பிரதேசத்தில் வசிக்கக் கூடிய மக்கள் இந்தி மட்டுமே தெரிந்த காரணத்தால் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களுக்கு வந்து கழிவறை சுத்தம் செய்தல், சாலை போடுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்களைப் போலல்லாமல் ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐ.டி. துறைக்கு வேலைக்குச் செல்கின்றனர்.” என திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு பலரும் எதிர்வினையாற்றி வரும் நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்கள் குறித்த திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கலைஞர் கருணாநிதியின் கட்சியான திமுக சமூகநீதியில் நம்பிக்கை கொண்டுள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார் மக்களை பற்றி அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் அப்படி ஏதாவது பேசியிருந்தால், அது கண்டிக்கத்தக்கது, இதுபோன்ற கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.” என தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஊழியருக்கு பணி ஒதுக்கீடு: கிளர்க் சஸ்பெண்ட்!
மேலும், “சாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்தியிருந்தாலோ அல்லது சில சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இதுபோன்ற அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டு துன்பப்படுகிறார்கள் என்பதை திமுக எம்.பி. சுட்டிக்காட்டியிருந்தாலோ, அது சரியானதாக இருந்திருக்கும். ஆனால் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும் கேலி செய்யும் விதத்தில் இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகும் திமுக எம்.பி. தயாநிதி மாறனின் வீடியோ பழை வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.