
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டம் தாராபாடி பகுதியில் திருமண விழாவில் கலந்துக் கொண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நானியா கிராமத்திற்கு 10 பேர் காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 8 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.