
நாடு முழுவதும் முறைகேடாக செயல்பட்டு வந்த 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்றுவரும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறி செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் ஒரு ஆய்வு கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொண்டு நிறுவனங்கள் குறித்து வெளியுறவுத்துறை ஒரு ஆண்டாக விசாரித்து உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்தது.
இதையடுத்து, தொண்டு நிறுவனங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் தொண்டு நிறுவனங்களில், 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் முறைகேடாக செயல்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, முறைகேடாக செயல்பட்டு வந்த 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. தற்போது உள்ள 13 ஆயிரம் தொண்டு நிறுவனங்களில் 3 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வெளியுறவுத் துறைக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும், மேலும் 2 ஆயிரம் புதிய தொண்டு நிறுவனங்களும் உரிமம் கேட்டு விண்ணப்பித்து உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.