உச்ச நீதிமன்றமே எங்க பக்கம்தான், அயோத்தியில் ராமர் கோயில் உறுதியாகக் கட்டுவோம் என்று உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா பேசியது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
உச்ச நீதிமன்றமே எங்கபக்கம்தான், அயோத்தியில் ராமர் கோயில் உறுதியாகக் கட்டுவோம் என்று உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் முக்த் பிஹாரி வர்மா பேசியது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது பாஜக தலைவர் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச அரசில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் முக்த் பிஹாரி வர்மா பஹாரெய்ச் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான அனைத்து சிக்கல்களையும் நாங்கள் தீர்த்து, விரைவில் அங்கு ராமர் கோயிலைக் கட்டுவோம். உச்ச நீதிமன்றமே எங்கள்பக்கம்தான், எங்களுடையதுதான், ஆதலால் கவலையில்லை அனைத்து சிக்கல்களையும் தீர்த்துவிடுவோம்.
நீதிமன்றம், இந்த நாடு, ராமர் கோயில் அனைத்தும் எங்களுடையதுதான் என்று அவர் தெரிவித்தார். பாஜக அமைச்சர் முக்த் பிஹாரி வர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. இதையடுத்து, தனது பேச்சுக்கு விளக்கம் அளித்து அமைச்சர் பிஹாரி வர்மா அளித்த பேட்டியில், நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நாமெல்லாம் இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்ற அர்த்தத்தில் தெரிவித்தேன் எனத் தெரிவித்தார்.