Shubhanshu Shukla வின் ஆக்சியம்-4 விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

Published : Jun 11, 2025, 12:17 PM ISTUpdated : Jun 11, 2025, 12:55 PM IST
Axiom-4 Mission Postponed

சுருக்கம்

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் ஆக்சியம்-4 பணி, ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட LOx கசிவு காரணமாக இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய ஏவுதல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் மூன்று பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செவ்வாய்க்கிழமை (ஜூன் 10, 2025) அன்று கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த Axiom-4 பணி, இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மோசமான வானிலை காரணமாக ஜூன் 10 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 11 ஆம் தேதிக்கு ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த முறை, ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) இன் ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்ஸிஜன் (LOx) கசிவு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை இன்னும் சரிசெய்யப்படவில்லை, மேலும் புதிய ஏவுதல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த ஒத்திவைப்பை ஸ்பேஸ்எக்ஸ் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளது. Axiom Space சமூக ஊடகக் குழு, "பூஸ்டர் ஆய்வு செய்தபின் கண்டறியப்பட்ட LOx கசிவை ஸ்பேஸ்எக்ஸ் குழுவினர் சரிசெய்ய கூடுதல் நேரம் தேவைப்படுவதால், விண்வெளி நிலையத்திற்கு Ax-4 ஐ ஏவ திட்டமிடப்பட்டிருந்த ஃபால்கன் 9 ராக்கெட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். பணி முடிந்ததும் புதிய ஏவுதல் தேதியை அறிவிப்போம்" என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரோ - நாசா கூட்டணி:

குறிப்பிடத்தக்க வகையில், இந்த பணிக்காக இஸ்ரோ நாசாவுடன் இணைந்து செயல்படுகிறது. இஸ்ரோ இந்த திட்டத்தில் 550 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவரான குரூப் கேப்டன் சுக்லாவை மிஷன் பைலட்டாக நியமித்துள்ளது. 14 நாள் பயணத்தின்போது விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) இணைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறுகையில், ஏவுதல் வாகன தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, ஃபால்கன் 9 பூஸ்டர் கட்டத்தில் ஏவுதளத்தில் ஏழு வினாடிகள் ஹாட் டெஸ்ட் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது உந்துவிசைப் பிரிவில் LOx கசிவு கண்டறியப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. Axiom மற்றும் SpaceX நிபுணர்களுடன் நடத்தப்பட்ட விவாதங்களின் அடிப்படையில், கசிவை சரிசெய்து, ஏவுதலுக்கு அனுமதிப்பதற்கு முன் தேவையான சரிபார்ப்பு சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். எனவே, முதல் இந்திய ககன்யாத்ரியை ISS க்கு அனுப்ப ஜூன் 11, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த Axiom-4 ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முதல் இந்திய விண்வெளி வீரர்:

சுபான்ஷு சுக்லா ஒரு விண்கலத்தை இயக்கும் முதல் இந்தியர் ஆவார். 1984 இல் இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை.

சுக்லாவைத் தவிர, குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், போலந்தின் திட்ட விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னியெவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த டிபோர் கப்பு ஆகியோர் அடங்குவர். ஐந்தாவதாக, ஜாய் என்ற ஒரு பட்டு அன்னப் பறவை பொம்மையும் குழுவுடன் பயணிக்கும்.

நான்கு விண்வெளி வீரர்களும் ஏவுதலுக்கு முந்தைய நெறிமுறைகளின் ஒரு பகுதியாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பூமிக்கு திரும்புவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

60 விஞ்ஞான சோதனைகள்:

இந்தக் குழு சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 விஞ்ஞான சோதனைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் சுக்லா தலைமையிலான ஏழு ஆய்வுகளும் அடங்கும். இந்த ஆய்வுகளில் இந்தியா, அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி, சவூதி அரேபியா, பிரேசில், நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 31 நாடுகளின் பங்களிப்புகள் அடங்கும். இந்த ஆராய்ச்சி விண்வெளியில் மனித உடலியல், AI பயன்பாடுகள், உயிரியல், பொருள் அறிவியல் மற்றும் மனித சகிப்புத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

இந்த பணி இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு இந்த சோதனைகளை முக்கியத் தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!
பீகார் SIR பணியில் தில்லுமுல்லு.. நீக்கப்படாத 5 லட்சம் போலி வாக்காளர்கள்!