சாமியார் ஆசாராம் பாபு உடன் பிரதமர் மோடி மேடையில் நிற்கும் பழைய வீடியோவை வெளியிட்டு, காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் 75 வயதான ஆசாராம் பாபு. இவரும், இவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த இரு சகோதரிகள் போலீசில் புகார் அளித்தனர். கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.
இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியும், ஆசிரமத்தில் தங்கி படித்து வந்தபோது ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திரிந்தார். இதுதவிர மேலும் பல கற்பழிப்பு குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன.பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான ஆசாராம் பாபுவை கற்பழிப்பு மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார தடை சட்டத்தின்கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மேலும், ஆசாராம் பாபுவின் உதவியாளர்கள் ஷில்பி, சரத் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்ப்பட்டது.
ஆசாரம் பாபு குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவில், ஆசாராம் உடன் பிரதமர் நரேந்திர மோடி மேடையில் ஒன்றாக நிற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இது குறித்து பாஜக, பழைய வீடியோவை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த வீடியோ 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும், அப்போது ஆசாராம் மீது வழக்குகள் ஏதும் இல்லை என்றும் பாஜக கூறியுள்ளது. அது மட்டுமல்லாமல் கமல்நாத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், சாமியார் ஆசாராம் பாபுவுடன் தொடர்பில் இருந்ததாகவும் பாஜக தெரிவித்துள்ளது.