
உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு மறைமுக வரிவருவாய் பெருமளவு அதிகரித்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்றும் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொது மக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் முன்பு மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அருண் ஜேட்லி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது ரிசர்வ் வங்கியில் போதுமான அளவுக்கு பணம் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்த ஜேட்லி, புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஏராளமாக புழக்கத்தில் வர உள்ளதாகவும் கூறினார்.
வங்கிகள் மூலம் நடக்கும் பரிவர்த்தனையால் வரி வசூல் அதிகரித்துள்ளது என்றும் மறைமுக வரிவருவாயும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் ஆதரவளித்த அனைத்துப் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.