ஆரியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களா..? திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள்.. தெறிக்கவிடும் சித்தராமையா.!

By Asianet TamilFirst Published May 28, 2022, 10:38 PM IST
Highlights

கர்நாடகாவில் அண்மையில் மா நிலப் பாடத்திட்டத்தில் 10- ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்து தந்தை பெரியார், ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் பாடங்கள் நீக்கப்பட்டன. 

திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள் என்று கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் அண்மையில் மா நிலப் பாடத்திட்டத்தில் 10- ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்து தந்தை பெரியார், ஸ்ரீ நாராயண குரு ஆகியோர் பாடங்கள் நீக்கப்பட்டன. அதேவேளையில் 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் கருத்துக்கள் சேர்க்கப்பட்டன. இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியார், ஸ்ரீ நாராயண குரு பாடங்கள் நீக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கண்டனம் தெரிவித்திருந்தார். கர்நாடகாவிலும் எதிர்கட்சியினர். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இந்தப் பாடத்திட்ட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மாநில எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் சித்தராமையா பேசும் போது, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ன இந்தியாவின் பூர்வகுடிகளா? முதலில் ஆரியர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களா எனச் சொல்லுங்கள்? ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திராவிடர்களா? திராவிடர்கள்தான் இந்தியாவின் பூர்வகுடிகள். ஆனால், இந்த உண்மையை ஆர்.எஸ்.எஸ். மறைக்கப் பார்க்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டை ஐந்தாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தும் அபாயகரமான வேலையை செய்து வருகிறார்” என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

click me!