30 நாள் ஜெயிலுக்குப் போனால் பதவி காலி! எதிர்க்கட்சிகளை அலறவிட்ட அமித் ஷா!

Published : Aug 20, 2025, 03:39 PM ISTUpdated : Aug 20, 2025, 03:45 PM IST
amith shah

சுருக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மசோதாக்கள், கடுமையான குற்ற வழக்குகளில் 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் அளிக்கின்றன. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் மூன்று புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாக்கள், கடுமையான குற்ற வழக்குகளில் 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருக்கும் பட்சத்தில், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் பதவியை இழக்க நேரிடும் என்ற விதியை முன்வைத்துள்ளன.

புதிய மசோதாக்கள் அறிமுகம்

யூனியன் பிரதேசங்கள் (திருத்த) மசோதா, 2025, அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதா, 2025 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2025 ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த மசோதாக்கள், பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளை தகுதியிழப்பு செய்வதற்கான ஒரு சீரான விதியை உருவாக்கும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதாக்கள் ஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்படும் என்று அமித் ஷா அறிவித்தார்.

 

 

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் மக்களவையில் பெரும் அமளி ஏற்பட்டது. எதிர்ப்புக் கட்சிகளின் எம்.பி.க்கள் புதிய மசோதாக்களின் நகல்களை கிழித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நோக்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

"மசோதாவை திரும்பப் பெறு" என்று எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதோடு, அவையில் குழப்பம் நிலவியது. பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டு தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து

இந்த மசோதாக்கள் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்பவை என்று ஆம் ஆத்மி தலைவர் அனுராக் தண்டா விமர்சித்தார். மத்திய அரசு அதன் அதிகாரத்தை எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கப் பயன்படுத்தும் என்றும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் எந்த ஆதாரமும் இன்றி நீண்ட காலம் சிறையில் இருந்ததை உதாரணமாகக் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இந்த மசோதாக்கள் எதிர்க்கட்சி முதலமைச்சர்களை தேர்தலில் தோற்கடிக்காமல், மத்திய முகமைகளை பயன்படுத்தி அவர்களை பதவியிலிருந்து நீக்க வழி வகுக்கும் என்று அச்சம் தெரிவித்தார். இந்த மசோதாக்கள் அரசியல் எதிரிகளை பலவீனப்படுத்தப் பயன்படும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

அதே சமயம், அரசு தரப்பு இந்த மசோதாக்கள் பொறுப்புடைமை மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அவசியமானவை என்று வாதிடுகிறது. இந்த மசோதாக்கள் ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்ட பிறகு, அதன் மீதான விவாதங்கள் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?