உங்களுக்கு அந்த அதிகாரத்தை அளித்தது யார்..? உத்தர பிரதேச அரசை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்

By Asianet TamilFirst Published Mar 10, 2020, 1:34 PM IST
Highlights

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பொதுச்சொத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக்கூறி அவர்களின் புகைப்படங்களையும் செலுத்த வேண்டிய தொகையையும் வெளியிட்ட உ.பி. அரசை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. அந்த புகைப்படங்களை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டது
 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் போராட்டத்தின் போது ஏற்பட்ட சொத்து இழப்பிற்கு ஈடு செய்ய வேண்டும் என கோரிகுற்றம் சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்களையும் முகவரியையும் அபராதத் தொகையையும் குறிப்பிட்டு போஸ்டர்களை லக்னோ மாவட்ட நிர்வாகம் லக்னோ மாவட்டத்தில் உள்ள பல நகரங்களில் பொது இடங்களில் வெளியிட்டது.

தனிப்பட்டவர்களின் சொந்த விவரங்களை வெளியிட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை, அந்த போஸ்டர்களை நீக்குக என்று உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி ரமேஷ் சின்ஹா தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

 இந்த உத்தரவை அமல் செய்த விவரம் குறித்து நீதிமன்றத்துக்கு மார்ச் 16 ஆம் தேதி தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தனியார் மற்றும் பொதுச்சொத்துக்களை ரூ. 1.55 கோடி அளவுக்கு நாசம் செய்ததாகவும் அந்த தொகையை அவர்கள் ஈடுசெய்ய வேண்டும் எனவும் அவர்கள் பெயருக்கு நோட்டீஸ்கள் அரசுத்தரப்பில் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோட்டிஸிலும் சம்பந்தப்பட்ட நபர் எவ்வளவு பணத்தை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையை அவர்கள் செலுத்தத் தவறி விட்டால் அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசு இத்துடன் விட்டு விடாமல் இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள்  57 பேருடைய புகைப்படங்கள், அவர்கள் வசிப்பிட முகவரி, ஆகியவற்றையும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகையையும் குறிப்பிடும் போஸ்டர்களை வெளியிட்டு, அந்த போஸ்டர்களைப் பொதுமக்கள் பார்வைக்காக பொது இடங்களில் நிறுவியது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த போஸ்டர்கள் தொடர்பாக உத்தர பிரதேச மாநில உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, வழக்கத்துக்கு மாறாக இந்த வழக்கு விசாரணையைத் துவக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை நேற்று  நீதிபதி கோவிந்த் மாத்துர்  , நீதிபதி ரமேஷ் சின்காவும் தீர்ப்பளித்தனர் அதில்

குற்றம்சாட்டப்பட்டவர்களின் புகைப்படம் பெயர் முகவரி அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஆகிய விவரங்களை கொண்ட போஸ்டர்களை வெளியிட அரசுக்கும் போலீசுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அவ்வாறு அதிகாரம் வழங்கும் சட்டமும் எதுவும் தற்பொழுது கிடையாது

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் புகைப்படங்களை வெளியிட போலீசுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் அதிகாரம் கிடையாது .குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்க தலைமறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களை கைது செய்வதற்கு உதவியாக அவர்கள் புகைப்படங்களை வெளியிட நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

 நீதிமன்றம் எழுத்து மூலமான பிரகடனம் வெளியிடவும் அதிகாரம் உள்ளது. குற்றவியல் சட்ட நடைமுறை விதிகளின்படி போலீசாருக்கு அரசுக்கும் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களை பொதுவில் வெளியிட எந்த அதிகாரமும் இல்லை. அரசின் செயல் அரசியல் அமைப்புச்சட்ட விதி 21க்கு எதிரானது  

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணவும் ஆவணப்பதிவுக்காகவும் புலனாய்வு ஏஜென்சி அல்லது மற்ற அதிகாரிகளும் படத்தை எடுக்கவும் ஆவணப் பதிவுக்கு பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தப் புகைப்படங்களை திறந்தவெளியில் போஸ்டராக வெளியிட அவர்களுக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

click me!