
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பது தொடர்பான மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய சிறுமிக்கு தற்போது 16 வயது தான் ஆகிறது. அவர் ஏழு மாத கருவை தனது வயிற்றில் சுமந்துள்ளார். நீதிமன்ற அனுமதியின்றி கருக்கலைப்பு செய்யக்கூடிய 24 வார கால எல்லையைத் தாண்டியதால் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே 'சமரசம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்று நீதிபதி வழக்கறிஞரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் "நான் சமரசம் செய்ய ஏற்கனவே முயற்சித்தேன், ஆனால் அவரிடமிருந்து நேர்மறையான பதில் இல்லை. இந்த நீதிமன்றத்தின் அதிகாரியாக, இது மூன்று உயிர்களை (குழந்தை, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உயிர்களை) காப்பாற்றும் என்று என்னால் கூற முடியும்," என்று கூறினார்.
இதை தொடர்ந்து குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது மோர்பி மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி, " அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். அவரிடம் நான் கேட்கிறேன். அவருடன் பேசி சமரசம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதா நான் தெரிந்துகொள்கிறேன். தற்போது, சாத்தியக்கூறுகள் பற்றி யோசித்து வருகிறேன். ஆனால் பல அரசு திட்டங்கள் உள்ளன. அவர் வரட்டும், அவருடன் நான் பேசுகிறேன்” என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை அடுத்த விசாரணை தேதியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வருமாறு அச்சிறுமியின் வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தினார். அதன்படி, இந்தவழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமை மாலைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக ஜூன் 7 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக நீதிபதி சமீர் தவே, தெரிவித்தார். பகவத் கீதையை மேற்கோள் காட்டி பேசிய அவர், நீதிபதிகள் ஸ்திதபிரஜ்னாவைப் போல இருக்க வேண்டும் என்று கூறினார்.
"பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஸ்திதபிரஜ்னாவை போல நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று மட்டுமே என்னால் கூற முடியும். அது பாராட்டு அல்லது விமர்சனமாக இருந்தாலும், அதை ஒருவர் புறக்கணிக்க வேண்டும். எனவே, ஒரு நீதிபதி ஸ்திதபிரஜ்னாவைப் போல இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். " என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
கடந்த 7-ம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி சமீர் கடந்த காலத்தில் பெண்களுக்கு வயதுக்கு ஏற்ப திருமணம் செய்து வைக்கப்பட்டது குறித்து வாய்மொழியாக கூறினார். மேலும் “ முன்னெல்லாம் 14 முதல் 15 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.. 17 வயதை எட்டினால், குறைந்தபட்சம் முதல் குழந்தையையாவது பெற்றெடுப்பார்கள். சிறுவர்களை விட சிறுமிகள் மிகவும் முதிர்ச்சியடைகிறார்கள். மனுஸ்மிருதியில் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதை நீங்கள் படிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லவ் ஜிகாத்: சென்னை தனியார் கல்லூரி மாணவி எஸ்கேப்.. கட்டாய மதமாற்ற திருமணமா? தந்தை கதறல்