இந்திய தேசிய கொடியுடன் அஃப்ரிடி…. ரசிகர்கள் உற்சாகம்!!

First Published Feb 11, 2018, 9:07 AM IST
Highlights
afridi with Indian National flaf in switzerland


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃபரிடி இந்திய தேசிய கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அஃப்ரிடிக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு மிக நெருக்கமான எதிரி நாடாக கருதப்படுவது  பாகிஸ்தான். அடிக்கடி எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி உள்ளே நுழைவதும் அதற்கு நமது நாட்டு ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதும் வாடிக்கையாக நடை பெற்று வருகிறது.

இதே போன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் போதும் அனல் பறக்கும். இது ஒரு விளையாட்டு என்பதை மீறி இரு நாடுகளிடையேயான விரோதம் கொப்பளிக்கும். போட்டிகள் ஒரு போர் போலவே நடக்கும்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி செய்த காரியம் ஒன்று இரு நாட்டு ரசிகர்களையும் கூல் பண்ணியிருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் மோரிட்ஸ் ஐஸ்கட்டி மைதானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற இரண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி இரண்டு ஆட்டங்களிலும் ஷேவாக் தலைமையிலான டையமன்ட்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது.

வெற்றிக்கு பிறகு அஃப்ரிடி, அங்கு குழுமியிருந்த ரசிகர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இளம் இந்திய ரசிகை ஒருவரும் அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பினார். அந்த ரசிகை தனது கையில் இந்திய தேசிய கொடியை வைத்திருந்தார். அதை விரித்து பிடிக்க சொல்லி, அதன் பிறகு அந்த ரசிகையுடன் அஃப்ரிடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். 



பாகிஸ்தானைச் சேர்ந்த அப்ரிடி, இந்திய தேசிய கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அவரது செயலால் நெகிழ்ந்து போன இந்திய ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

click me!