
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் சட்ட மசோதாக்களின் தலைப்புகளில் இந்தி வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி. சிதம்பரம் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது இந்தி பேசாத மக்களை அவமதிக்கும் செயல் என்று அவர் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசு சட்ட மசோதாக்களின் தலைப்புகளில் ஆங்கில எழுத்துக்களில் இந்தி வார்த்தைகளைப் பயன்படுத்தும் நடைமுறை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
"இதுவரை, சட்ட மசோதாவின் ஆங்கிலப் பதிப்பில் தலைப்பை ஆங்கில வார்த்தைகளிலும், இந்திப் பதிப்பில் இந்தி வார்த்தைகளிலும் எழுதுவதுதான் நடைமுறையாக இருந்தது. 75 ஆண்டுகளாக இந்த நடைமுறையில் எந்தச் சிரமமும் இல்லாதபோது, அரசு ஏன் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும்? இந்த மாற்றம் இந்தி பேசாத மக்களுக்கும், இந்தியைத் தவிர வேறு அதிகாரப்பூர்வ மொழி கொண்ட மாநிலங்களுக்கும் ஒரு அவமானம் ஆகும்" என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மசோதாக்களின் தலைப்புகள் இந்தி வார்த்தைகளில் ஆங்கில எழுத்துக்களில் எழுதப்படுவதால், இந்தி பேசாத மக்களால் அவற்றை அடையாளம் காணவோ அல்லது உச்சரிக்கவோ முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், "ஆங்கிலம் தொடர்ந்து ஒரு துணை அலுவல் மொழியாக இருக்கும் என்று அடுத்தடுத்த அரசுகள் உறுதியளித்துள்ளன. அந்த உறுதிமொழி மீறப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அஞ்சுகிறேன்" என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட பல மசோதாக்களின் இந்திப் பெயர்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் தமது ஆட்சேபனையை எழுப்பியுள்ளார்.
காப்பீட்டுச் சட்டங்களைத் திருத்துவதற்கான சப்கா பீமா, சப்கி ரக்ஷா மசோதா, மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைத் திருத்துவதற்கான விக்சித் பாரத் - ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) உத்தரவாத மசோதா, அணுசக்தியை பயன்பாடு தொடர்பான விதிகளைக் கூறும் ஷான்டி மசோதா (SHANTI Bill) ஆகியவற்றை சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்படும் 'ஜி ராம் ஜி' திட்டத்தின் பெயருக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், தேசத் தந்தையின் பெயரில் பாஜக-வுக்கு ஏதேனும் சிக்கல் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசோ, இந்த 'ஜி ராம் ஜி' மற்றும் பிற திட்டங்களின் பெயர்கள், 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை (Viksit Bharat) அடிப்படையாகக் கொண்டவை என வாதிடுகிறது.