Aditya L1: ஆதித்யா எல்1 என்றால் என்ன? என்ன மாதிரியான ஆய்வுகளை இந்த விண்கலம் மேற்கொள்ளும்!!

By Dhanalakshmi GFirst Published Jan 6, 2024, 11:58 AM IST
Highlights

சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் இருப்பது Lagrangian Point 1 (or L1) எனப்படும் புள்ளி. சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்தப் புள்ளியை அடைவதற்கு இஸ்ரோ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
 

உலக வரலாற்றில் விண்வெளியில் இந்தியா அடையவிருக்கும் மேலும் மைல்கல் என்று கூறலாம். ஆதித்யா எல்1 விண்கலம் இன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு விட்டால், அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவுக்கு அடுத்து சூரியன் குறித்த ஆய்வில் வெற்றிகரமாக சூரிய ஆய்வில் காலடி எடுத்து வைக்கும் நாடாக கருதப்படும்.

ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்தாண்டு செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து இன்று வரை ஆதித்யா எல் 1 தனது பணியை சிறப்பாக செய்து வருகிறது. இதில் பொருத்தப்பட்டு இருக்கும் ஏழு ஆய்வுக் கருவிகளில் நான்கு இன்று வரை சரியாக இயங்கி இஸ்ரோவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து இன்று எல்1 புள்ளியை விண்கலம் அடைய இருக்கிறது. பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் சூரியன் உள்ளது. ஆனால், ஆதித்யா எல் 1 செல்லும் தூரம் இதில் நூறில் ஒரு மடங்குதான்.

விண்வெளி துறையில் புதிய வரலாறு.. ஆதித்யா-எல்1 சாதனை படைக்குமா? இஸ்ரோவை திரும்பி பார்க்கும் உலகம்.!!

ஆதித்யா எல்1 விண்கலம் இதன் மையப் புள்ளியை எட்டியதும் அங்கிருந்து மையப்புள்ளிக்கு வெளியே சமநிலையான ஈர்ப்பு இடத்தில் நிலைநிறுத்தப்படும். 

இந்த இடத்தில் நிலை நிறுத்தப்படும்போது, ஆதித்யா-எல் 1 சூரியனை எந்தவித கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து கண்காணிக்க உதவும். சூரிய செயல்பாடுகள் விண்வெளியில் ஏற்படுத்தும் தாக்கத்தை சரியான நேரத்தில் ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. சூரியனுக்கு வெளியே நிகழும் மாற்றங்களின் தரவுகளை அளிப்பதற்கு இந்த விண்கலம் உதவும். 

ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்றுவட்ட பாதை உயர்வு: இஸ்ரோ தகவல்!

சூரியனைப் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இந்த விண்கலத்தில் ஏழு வெவ்வேறு ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு சூரியனில் இருந்து வரும் ஒளியைக் கண்காணிக்கும் மற்ற மூன்று கருவிகள் பிளாஸ்மா மற்றும் காந்த சக்திகளை அளவிடும். இந்த ஏழு ஆய்வுக் கருவிகளில் முக்கியமானது Visible Emission Line Coronagraph எனப்படும் VELC. இந்தக் கருவிதான் சூரியனுக்கு வெளியே இருக்கும் வெளிப்புற மண்டலத்தை ஆய்வு செய்யும். அதாவது கரோனாவை ஆய்வு செய்யும். சூரியனுக்கு வெளியே பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இந்த கரோனா பயணித்து சூரியக் காற்றாக மாறுகிறது. கரோனாவில் இருக்கும் பொருள் மிகவும் வெப்பமானது. அதேசமயம் மெல்லிய பிளாஸ்மா போன்றது. 

சூரியக் கரோனாவின் வெப்பம், சூரியக் காற்றின் வெளியேற்றம், சூரிய வளிமண்டலத்தின் இணைப்பு மற்றும் இயக்கம், சூரியக் காற்றின் பரவல் மற்றும் வெப்பநிலை, பல மணி நேரங்களுக்கு சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் கரோனா பிளாஸ்மாவின் பெரிய குமிழ்களை ஆய்வு செய்யும்.  அதாவது தீவிர காந்தப்புலக் கோடுகளால் திரிக்கப்பட்ட இந்த குமிழ்கள் குறித்த ஆராய்ச்சியை ஆதித்யா எல்1 விண்கலம் ஆய்வு மேற்கொள்ளும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின் மூலம் பூமியை எந்தளவிற்கு காந்தக் காற்று தாக்குகிறது. எவ்வாறு எதிர்காலத்தில் தொழில்நுட்ப சாட்டிலைட்டுகளை இதன் தாக்கத்தில் இருந்து காப்பாற்றலாம் என்பது தெரிய வரும். சூரிய கிரகணம் தாக்கம் இல்லாமல் சூரியனின் நடவடிக்கைகளை ஆதித்யா 1 ஆய்வு செய்யும். இதன் மூலம் விண்வெளியில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை அறியலாம். விண்கலத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் நான்கு ஆய்வுக் கருவிகள் நேரடியாக சூரியனை ஆய்வு செய்யும், மற்ற கருவிகள் எல்1 புள்ளியில் இருக்கும் மாசுக்களையும், சுற்றுப் புறத்தையும் ஆய்வு செய்யும்.

click me!