
சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்திற்கு ஆதார் எண் சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் வரை மத்திய அரசு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கி வருகிறது. ஆனால், சமையல் எரிவாயு விநியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதை முறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், சமையல் கேஸ் நேரடி மானியத் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி,முதலில் வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை சந்தை விலையில் வாங்க வேண்டும். அதன் பின்னர், அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இதற்காக, தங்களது கேஸ் நிறுவனங்களிடம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்ணை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர். இதற்னிடையே, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதில் செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் வங்கி மற்றும் கேஸ் நிறுவனங்களிடம் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு மானியம் வழங்க வேண்டும் என்றும், ஆதார் எண் தராதவர்களுக்கு மானியத்தை நிறுத்த வேண்டும் என்றும் முதலில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெரும்பாலானோருக்கு ஆதார் அட்டை பெற கால அவகாசம் தேவைப்படுவதால், நவம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.