6 மாசத்துக்கு உணவு, எரிபொருள் இருக்கு... நீண்ட போராட்டத்துக்குத் தயாராக வந்த விவசாயிகள்!

By SG BalanFirst Published Feb 13, 2024, 3:08 PM IST
Highlights

விவசாயிகளின் பயணத்தை முறியடிக்க டிராக்டர்களுக்கு டீசல் வழங்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

டெல்லியை நோக்கி அணிவகுத்துச் செல்லும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தேசியத் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால், மனம் தளராத விவசாயிகள் பல மாதங்களுக்குத் தேவையான ரேஷன் மற்றும் டீசலை எடுத்துக்கொண்டு நீண்ட போராட்டத்துக்குத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்துவருவதால், 2020ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போன்ற நீண்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி இருக்கிறார்கள்.

பொறுமையை சோதித்தால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

"ஊசி முதல் சுத்தியல் வரை... எங்களின் வண்டிகளில் கற்களை உடைக்கும் கருவிகள் உட்பட அனைத்தும் உள்ளன. ஆறு மாத ரேஷன் உடன் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளோம். ஹரியானாவைச் சேர்ந்த எங்கள் சகோதரர்களுக்குக்கூடப் போதுமான டீசல் எங்களிடம் உள்ளது" என்று பஞ்சாபின் குர்தாஸ்பூரில் இருந்து வந்துள்ள விவசாயி ஹர்பஜன் சிங் கூறுகிறார்.

விவசாயிகளின் பயணத்தை முறியடிக்க டிராக்டர்களுக்கு டீசல் வழங்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதச் சட்டம் சாத்தியமா?

இந்தப் போராட்டம் 2020ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறிய விவசாயி ஹர்பஜன் சிங், இந்த முறை தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என்றார்.

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டரை ஓட்டிச் செல்லும் அவர், "கடந்த 13 மாதங்களாக நாங்கள் எதுவும் செய்யவில்லை. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. இந்த முறை எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாங்கள் வெளியேறுவோம்" எனக் கூறுகிறார்.

சண்டிகரில் அரசுக் குழுவுடன் நள்ளிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, விவசாயிகள் இன்று காலை பதேகர் சாஹிப்பில் இருந்து 'டெல்லி சலோ' என்ற அணிவகுப்பைத் தொடங்கினர்.

முன்னதாக மின்சாரச் சட்டம் 2020 ரத்து, உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூரில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, மற்றும் விவசாயிகள் மீதான பழைய வழக்குகளை வாபஸ் பெறுதல் போன்ற கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றபோதும், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவ்வு விலை உத்தரவாதத்தை சட்டம் இயற்றுதல், விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய எல்லைப் புள்ளிகளான காஜிபூர், திக்ரி மற்றும் சிங்குவில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. டிராக்டர்கள் மற்றும் தள்ளுவண்டிகள் நகருக்குள் செல்ல இயலாத வகையில் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகள் மற்றும் ஆணிகள் வைக்கப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் கூட்டம் கூட காவல்துறை ஒரு மாத காலத்திற்குத் தடை விதித்துள்ளது.

பல இடங்களில் நடைபெறும் போலீஸ் சோதனை காரணமாக எல்லைப் பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இனி சார்ஜர் தேவை இல்ல... மொபைலை பாக்கெட்டில் வைத்தாலே சார்ஜ் ஆகிவிடும்!

click me!