இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவுதலில் இந்தியா, இரண்டாவது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வந்தாலும், இந்தியாவில் இன்னும் பொதுச்சமூகத்தில் கொரோனா பரவ தொடங்கவில்லை என்பதுதான் ஆதரவான விஷயமாக உள்ளது.
கொரோனாவிலிருந்து தப்பித்து, அது பொதுச்சமூகத்தில் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதுடன், மக்களிடம் தனிமைப்படுத்துதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்கி, நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு பின்பற்றப்பட்டுவருகிறது. ஆனாலும் நேற்று மாலை 290ஐ கடந்திருந்த கொரோனாவின் தாக்கம், தற்போது 370 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை இந்தியாவில் 315ஆக இருந்த கொரோனா பாதிப்பு, 324, 332, 341 என உயர்ந்து கொண்டே வந்த நிலையில், சற்று முன் மேலும் 29 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370ஆக உயர்ந்துள்ளது.