
கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள மருத்துவகல்லூரியில் மருத்துவம் பயின்று வரும் 33 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டிலே முதல் முறையாக கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியபட்டது. இதனைதொடர்ந்து மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை புதிய கட்டுபாடுகளும் விதிக்கபட்டுள்ளன. மேலும் புத்தாண்டையொட்டி கேளிக்கை விடுதிகள், திறந்த வெளிகளில் மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை போடப்பட்டுள்ளது. பெலகாவில் செவ்வாய்கிழமை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் மாறுபாடு உலகளவில் ஆயிரக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் விமான போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 415 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.அதேசமயம் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து 115 பேர் குணமடைந்துள்ளனதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இதுவரை 31 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.