சென்னையில் விரைவில் 2வது விமான நிலையம்... மத்திய அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு!!

Published : Mar 30, 2022, 05:34 PM IST
சென்னையில் விரைவில் 2வது விமான நிலையம்... மத்திய அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு!!

சுருக்கம்

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். 

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். போபால் - சென்னை இடையேயான நேரடி விமான சேவையை, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த தொடக்க நிகழ்வில், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை வடக்குத் தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் வீராசாமி கலாநிதி, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் ராஜீவ் பன்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சென்னையில் இரண்டாவது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதுக்குறித்து பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள பெரு நகரங்களுக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டு உள்ளோம். அதில், 38 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டெல்லிக்கு அருகே இரண்டாவது விமான நிலையத்தை ஜிவாரில் கட்டி வருகிறோம். அதேபோல, மும்பையில் இரண்டாவது விமான நிலையம் நவி மும்பையில் 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறோம்.

சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டுவர திட்டமிட்டு உள்ளோம். அதற்காக 4 இடங்களை மாநில அரசு விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் பரிந்துரைத்து உள்ளோம். மாநில அரசு தேர்வு செய்த அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் இந்த அறிவிப்பு சென்னை மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதை அடுத்து சென்னையில் விரைவில் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

PAN Card Rules: ஏப்ரல் 1 முதல் பான் கார்டுக்கு புது ரூல்ஸ்! இனி ஆதார் மட்டும் போதாது!
Ind Vs Pak Nuclear War: இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அணு ஆயுதப் போர்? வெளியான பரபரப்பு ரிபோர்ட்