இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நாட்டில் 682 பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன, அதில் தமிழகத்தில் 232 என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய பஞ்சாலைத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியதாவது-
இந்த வருடம் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி நாட்டில் 1,399 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் சிறு தொழிற்சாலைகள் அல்ல.
இவ்வாறு இயங்கிவரும் பஞ்சாலைகளில் 752 பஞ்சாலைகள் தமிழகத்தை சேர்ந்தவை ஆகும்.
பஞ்சாலை தொழிலில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. பஞ்சாலைகளை நவீனப்படுத்த 15 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. நெசவுத் தொழில், சணல் மற்றும் கைத்தறி தொழில் வளர்ச்சிக்கு 10 சதவீத முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த வருடம் ஜூன் மாதம் வரை நாட்டில் உள்ள 682 பஞ்சாலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் 232 தொழிற்சாலைகள் தமிழகத்தையும் 85 தொழிற்சாலைகள் மகாராஷ்டிரா மாநிலத்தையும் 60 தொழிற்சாலைகள் உத்தரப்பிரதேசத்தையும் சேர்ந்தவை. அரியானா மாநிலத்தில் 42 பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.