2 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து; வங்கி கணக்குகள் முடக்கம்… கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய நிதி அமைச்சகம் அதிரடி…

First Published Sep 6, 2017, 9:29 PM IST
Highlights
2 lacks companies egistration cancelled


கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 2 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு

நாட்டின் வளர்ச்சிக்கு மறைமுகமாக பெரும் தடையாக கருப்பு பணம் உள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்கவும் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முறைகேடான பணப்பரிவர்த்தனைகள் மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை தடுக்க மத்திய தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மத்திய நிதி அமைச்சகம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நிறுவன பதிவாளரிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு கண்காணிக்க தொடங்கியது. நிறுவன சட்டம் பிரிவு 248கீழ் விதிமுறைக்கு இணங்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. இதனையடுத்து நிறுவன பதிவாளரிமிருந்து 209032 நிறுவனங்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் இயக்குனர்கள்

மேலும் நீக்கப்பட்ட நிறுவனங்களி்ன் வங்கி கணக்குகளை முடக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவு ரத்து செய்த நிறுவனங்களின் இயக்குனர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புமிக்கவர்கள் தற்போது முன்னாள் இயக்குனர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புமிக்கவர்களாக கருதப்படுவர்.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவு இல்லாமல் இவர்களால் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை செயல்படுத்த முடியாது. பதிவு ரத்து செய்யப்பட்ட நிறுவனத்தை தீர்ப்பாயம் செயல்படும் நிறுவனமாக அறிவித்தால் மட்டுமே அவர்களால் வங்கி கணக்கை பயன்படுத்த முடியும்.

கண்காணிப்பு

நிதி நிலை அறிக்கை தாக்கல் அல்லது ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் நிறுவனங்களை கண்காணிக்கும்படி வங்கிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களில் 1 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 30ம் தேதி மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது 2 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களி்ன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது. 

மேலும் கருப்பு பணத்தை பதுக்கியது மற்றும் ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்ட 37  ஆயிரம் போலி நிறுவனங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் கருப்பு பணத்தை ஒழிப்பதில் மத்திய அரசின் பிடி இறுகி வருவதை உணர்த்துவதாக உள்ளது.

 

 

 

 

 

click me!