Mumbai 144: உயரும் ஒமைக்ரான் பாதிப்புகள்… மும்பையில் டிச.31 வரை 144 தடை!!

By Narendran SFirst Published Dec 15, 2021, 7:22 PM IST
Highlights

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் டிச.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் டிச.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக மும்பையில் இதுவரை 20 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.  ராஜஸ்தானில் 9 பேர், குஜராத்தில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர், டெல்லியில் 6 பேர், சண்டிகர், ஆந்திரா, கேரளாவில் தலா ஒருவர் என இதுவரை 53 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் மட்டும் 28 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 53 பேரில் 20க்கும் மேற்பட்டோர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவிலேயே ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருப்பதும் இந்த மாநிலத்தில்தான். எனவே ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே  11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மும்பை காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில்  எந்தவிதமான போராட்டம், பேரணிகள், கூட்டங்கள், வாகன அணிவகுப்பு ஆகியவை நடத்தத் தடை விதிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது மீண்டும் மும்பையில் டிச.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 25ஆம் தேதி வரும் கிறிஸ்துமஸ், 31 ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!