ஓ.பி.எஸ்.க்கு வேட்டு வைக்கும் தங்கம்... 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணை..!

By vinoth kumarFirst Published Jul 2, 2019, 11:22 AM IST
Highlights

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டது. இதற்கிடையில் முதல்வராக பொறுப்பேற்க சசிகலா முயற்சித்தார். ஆனால் அது முடியாமல் போனது. அதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

அப்போது சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இந்நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு, சபாநாயகர் தரப்பு, திமுக மற்றும் தினகரன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி ஓய்வு பெற்றுவிட்டதால் வழக்கு பல நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. 

இந்நிலையில், வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதாக வழக்கு தொடுத்த தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும் வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு உடனடியாக அறிவிக்கப்படும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். 

click me!