
சிறுவர்களிடம் பாசம், இரக்கம் போன்ற குணாதிசயங்கள் அதிகளவில் பொங்கி வழிவது அனைவரும் அறிந்த ஒன்று தான். சிறுவர்கள் தங்களை விட வயதில் குறைந்தவர்கள் மீது அக்கறை செலுத்தவும், அவர்களை பக்குவமாக பார்த்துக் கொள்ளவும் எப்பவும் தயங்கவே மாட்டார்கள்.
அழும் குழந்தையை சமாதானம் செய்வது, அவர்களை விளையாட செய்வது என பல விஷயங்கள் சிறுவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். அந்த வரிசையில், மணிப்பூரை சேர்ந்த பத்து வயது சிறுமி இரண்டு வயதான தனது சகோதரியை பள்ளிக்கு அழைத்து சென்று இருக்கும் சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் வகுப்பறையில் தனது சகோதரியை மடியில் படுக்க வைத்துக் கொண்டு பாடம் கவனிக்கும் சிறுமியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கட்டாயம்:
சிறுமியின் பெற்றோர் குடும்ப சூழல் காரணமாக விவசாயம் மற்றும் இதர பணிகளுக்கு சென்று விட்டதால் அவர், தனது இரண்டு வயதான சகோதரியை பள்ளிக்கு அழைத்து சென்று இருக்கிறார். பள்ளி நேரத்தில் சகோதரியை பார்த்துக் கொண்டே பாடம் கவனிக்கும் சிறுமிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சரின் உதவி:
பாசக்கார சிறுமியின் புகைப்படம் மணிப்பூர் மின்சக்தி, வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிஸ்வஜித் சிங் வரை சென்றடைந்து இருக்கிறது. புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட அமைச்சர் பிஸ்வஜித், "கல்வியின் மீது இந்த சிறுமி வைத்திருக்கும் அர்ப்பணிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது! மணிப்பூர் மாநிலத்தின் தமெங்லாங் பகுதியை சேர்ந்த மெயினிங்லினு பமேய் என்ற பத்து வயது சிறுமி தனது பெற்றோர்கள் விவசாயம் மற்றும் இதர பணிகளுக்கு செல்லும் போது இளம் சகோதரியுடன் பள்ளி சென்று வருகிறார்." என குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், "இந்த செய்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். செய்தி அறிந்ததும் சிறுமியின் குடும்பத்தாரை தேடி கண்டுபிடித்து, இம்பால் அழைத்து வர கூறியிருந்தேன். அதேபோன்று அவர்களின் குடும்பத்தாருடன் பேசி, சிறுமி பட்டப்படிப்பு வரையிலான கல்வி செலவை முழுமையாக ஏற்றுக் கொள்வேன் என தெரிவித்து இருக்கிறேன். சிறுமியின் அர்ப்பணிப்பு பெருமையாக உள்ளது!" என குறிப்பிட்டு இருக்கிறார்.
சிறுமி மெயினிங்லினு பமேய் குடும்பத்தாருடன் மணிப்பூர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள தமெங்லாங் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் அதே மாவட்டத்தில் உள்ள தைலாங் ஆரம்ப பள்ளியில் பயின்று வருகிறார்.