
அக்கால கட்டங்களில் நமது, ஊரில் திருவிழா கடைகளில் மட்டுமே பேரிச்சம்பழம் எனும் ‘இரத்த விருத்தி’ ஏற்படுத்தும் பழத்தை விதவிதமான அலங்கார குவியலுடன் காண இயலும்.
குறிப்பிட்ட பெரிய பல சரக்கு கடைகளில் கண்ணாடி பொருத்தப்பட்ட டின்களில் நம் கண்ணில் படும் படியாக விற்பனைக்கு வைத்திருப்பதையும் கண்டு வாங்கி சுவைத்து மகிழ்ந்துள்ளோம்.
இன்றோ அனைத்து விற்பனை கூடங்களிலும் நமக்கு கிட்டுகிறது இந்த ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும் பேரிச்சம்பழம்.
இந்த பழத்திற்கு ரத்த வளத்தை மேம்படுத்தும் இயல்பு கூட உண்டு. வைட்டமின் சத்து ஏ மிகுந்து காணப்படும பேரிச்சம்பழத்தில் பி வைட்டமின், பி2, பி5, இ வைட்டமின், இரும்புசத்தும் விகிதாசாரத்தில் உண்டு. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட ஒரு நாளைக்கு இரண்டு. மூன்று பேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து அருந்தலாம் என மருத்துவம் கூறுகிறது.
தசை வளர்ச்சி, உடல் வலிமை தரும் பேரிச்சம்பழம் நம் நாட்டில் அதிகமாக விளைவதில்லை.
ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் விளைகின்றது. பேரிச்சம்பழம் இயற்கை நிலையில் பதப்படுத்தப்பட்டே கனிகளாக விற்பனைக்கு வருகிறது. இச்சுவை மிக்க இனிப்புக் கொண்ட பழத்தினால் லட்டு, அல்வா, பாயாசம் என விதவிதமானவற்றை நாம் தயாரிக்க பழகி வருகிறோம்.
காசநோயாளிகளுக்கு தரப்பட்டு வரும் சத்தான உணவு வகையில் இப்பழத்திற்கு பெரும் பங்கு உண்டு.
இப்பழத்தை தினமும் 2 எண்ணிக்கையில் உண்டு, பசும்பாலும் பருகி வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தால் உடல் நல்ல வளம், வலிமை உள்ளதாக திகழும்.