ஈரானின் அதிகார மையத்தைச் சிதைத்துவிட்டதாக அமெரிக்கா தம்பட்டம் அடித்தாலும், இந்தப் போர் உருவாக்கியுள்ள பொருளாதாரச் சரிவு உலக நாடுகளைப் பாடாய்ப்படுத்துகிறது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர், வெறும் ஏவுகணைத் தாக்குதல்களோடு நின்றுவிடவில்லை; அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் பொருளாதார முதுகெலும்பையே பதம் பார்த்து வருகிறது. போரில் நேரடியாகக் குதிக்காவிட்டாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இன்று சந்தித்து வரும் இழப்புகள் கற்பனைக்கு எட்டாதவை.
25
எண்ணெய் கிணறுகளில் பற்றி எரியும் நஷ்டம்!
மத்திய கிழக்கின் உயிர்நாடியே அதன் கச்சா எண்ணெய் தான். ஆனால், 'பைனான்சியல் டைம்ஸ்' வெளியிட்டுள்ள தரவுகள் உலகையே அதிர வைத்துள்ளன. இந்தப் போரினால் வளைகுடா நாடுகள் இதுவரை 15.1 பில்லியன் டாலர் எரிசக்தி வருவாயை இழந்துள்ளன. இதில் உச்சகட்டமாக சவுதி அரேபியா மட்டும் 4.5 பில்லியன் டாலர்களை வாரிக் கொடுத்துள்ளது. சவுதியின் பெருமையான 'அராம்கோ' எண்ணெய் நிறுவனம் போர் பதற்றத்தால் மூடப்பட்டது, அந்த நாட்டின் பொருளாதாரத்தில் விழுந்த பேரிடி.
இதற்கெல்லாம் முக்கியக் காரணம், உலகிற்கே எரிசக்தி வழங்கும் நரம்பாகக் கருதப்படும் 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) மூடப்பட்டதுதான். குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் மட்டும் இந்த வழித்தடம் முடங்கியதால் சுமார் 10 பில்லியன் டாலர்களை இழந்து தவிக்கின்றன.
35
உயிர் சேதங்கள்: ஒரு கசப்பான உண்மை
போர் வெடிமருந்துகளோடு மட்டும் விளையாடுவதில்லை, அது மனித உயிர்களையும் காவு வாங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 12 பேர், குவைத்தில் 8 பேர் என வளைகுடா நாடுகளில் பொதுமக்கள் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஈராக்கில் மட்டும் 59 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை, உலகப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2.5 பில்லியன் டாலர் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு 2 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. "சொகுசு வாழ்க்கைக்கும், சுற்றுலாவுக்கும்" பெயர் பெற்ற இந்த நாடுகள் இன்று வெறிச்சோடிக் கிடக்கின்றன.
ஒரு பக்கம் ஈரான் சிதைந்து கொண்டிருக்கிறது என்றால், மறுபக்கம் அமெரிக்கா தனது கஜானாவைத் திறந்து வெடிமருந்துகளை வாரிக் கொட்டுகிறது. பென்டகன் தகவல்படி, போரின் முதல் 10 நாட்களில் மட்டும் அமெரிக்கா 11 பில்லியன் டாலர் மதிப்பிலான வெடிமருந்துகளைச் செலவிட்டுள்ளது. இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்கா நடத்தும் இந்தத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி மற்றும் 40 உயர்மட்ட தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 2,000-க்கும் மேற்பட்ட ஈரானியப் பொதுமக்கள் இந்தப் போருக்குப் பலியாகியுள்ளனர்.
55
முடிவற்ற நெருக்கடி
ஈரானின் அதிகார மையத்தைச் சிதைத்துவிட்டதாக அமெரிக்கா தம்பட்டம் அடித்தாலும், இந்தப் போர் உருவாக்கியுள்ள பொருளாதாரச் சரிவு உலக நாடுகளைப் பாடாய்ப்படுத்துகிறது. வளைகுடா நாடுகளின் செல்வச் செழிப்பு போரின் புகையில் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வுகள் ஈரானை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் வளைகுடா நாடுகளின் எதிர்காலத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் ஒரு கேள்விக்குறியாகவே மாற்றியுள்ளது.
வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை இன்னும் உச்சத்தைத் தொடும் பட்சத்தில், இந்தப் போர் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஒரு தீராத 'தலைவலியாக' மாறும் என்பதில் சந்தேகமே இல்லை!