Chandrayaan-3: சந்திரயான்-3 வெற்றியை வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி

First Published Aug 24, 2023, 3:21 PM IST

சந்திரயான்-3 வெற்றியின் மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுடன் வெற்றியைக் கொண்டாடிய படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சந்திரயான்-3 வெற்றி

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் மென்மையாகத் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் முதல் முறையாகத் தடம் பதித்த இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை புதன்கிழமை பிரதமர் மோடி ஜோகன்னஸ்பர்க் ஹோட்டலில் கூடியிருந்த புலம்பெயர் இந்தியச் சமூகத்தினருடன் கொண்டாடினார்.

தென் ஆப்பிரிக்காவில் கொண்டாட்டம்

“ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து சந்திரயான்-3 வெற்றியின் உற்சாகத்தை உணர்கிறேன்! விண்வெளித் துறையில் இந்தியாவின் சாதனைகளுக்காக தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் உற்சாகம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் எழுதியுள்ளார்.

நிலவின் தென் துருவத்தில்

சந்திரயான் 3 இன் வெற்றியின் மூலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற இந்தியா, சந்திரனின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கிய நான்காவது நாடு என்ற சாதனையையும் வசப்படுத்தியுது.

சந்திரயானுக்கு வாழ்த்து

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்தியர்களுடன் சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாடிய படங்களையும் இணைத்துள்ளார். மூவர்ணக் கொடியையும் சந்திரயான் வெற்றிக்கான வாழ்த்து அட்டைகளையும் ஏந்திய வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியுடன் இஸ்ரோவின் சாதனையைக் கொண்டாடினர்.

பிரதமர் பெருமிதம்

நேற்று (புதன்கிழமை) சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய காட்சியை தென் ஆப்பிரிக்காவில் இருந்து நேரடியாக பார்வையிட்டுவந்த பிரதமர் மோடி, இந்தியா சரித்திரம் படைத்து இருப்பதாகவும் புதிய இந்தியா உருவாகியுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார். இது இந்தியாவின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது பல நாடுகள் நிலவில் ஆய்வு செய்ய ஊக்கம் அளிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

click me!