விஜய் பங்கேற்ற கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நெஞ்சை உருக்கும் சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், விஜய் கூட்டத்தில் இப்போது ஒருவர் மயங்கி விழுந்து ஒருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் இரங்கல்
விஜய் கூட்டத்தில் உயிரிழந்த சூரஜின் குடும்பத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''சேலத்தில் இன்று (13.02.2026) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் சூரஜ் என்ற சகோதரர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன்.
இளம் வயதில், பொதுநிகழ்வில் பங்கேற்ற ஒருவரின் உயிர் இவ்வாறு பறிபோனது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. அவரது மறைவு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் நலம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். உயிரிழந்த சூரஜ் சகோதரரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.