சிவகாசி தனியார் கல்லூரி மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டதால் கல்லூரி நிர்வாகம் கண்டித்ததைத் தொடர்ந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆசாரி காலனியை சேர்ந்தவர் சோலை ராணி (19). இவர் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.சி.ஏ படித்து வந்தார். இவரது தந்தை பாண்டியராஜன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு இதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
24
கண்டித்த கல்லூரி நிர்வாகம்
இந்த புகைப்படம் சக மாணவ மாணவியருக்கு தெரியவந்தது. பின்னர் கல்லூரி முதல்வரின் உதவியாளர் மூலமாக கல்லூரி முதல்வர் அசோக்கின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து கடந்த 20ம் தேதி மாணவியின் தாயாரை நேரில் அழைத்த கல்லூரி நிர்வாகம் மாணவியை கண்டித்தது மட்டுமல்லாமல் மன்னிப்பு கடிதம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த தாயும் மகளை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சோலை ராணி அன்று இரவே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
34
மாணவி தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கல்லூரி முதல்வர் அசோக், முதல்வரின் உதவியாளர் மணிமாறன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நுழைவாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறை சமாதானம் செய்தது மட்டுமல்லாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறை மதுரை மண்டல துணை இயக்குநர் கலைச்செல்வி கல்லூரியில் விசாரணை நடத்தியதை தொடர்ந்து முதல்வரின் உதவியாளர் மணிமாறனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் முதல்வரின் உதவியாளர் மணிமாறன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் முதல்வர் அசோக் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தலைமறைவாக உள்ள மணிமாறனை போலீசார் தேடி வருகின்றனர்.