
குபேர பகவான் செல்வத்தின் அதிபதியாக கருதப்படுகிறார். இவரை முறையாக வழிபடுபவர்களுக்கு வீட்டில் நிலையான செல்வமும், வளங்களும் பெருகும் என்பதும், வருமானத்திற்கு எந்த பற்றாக்குறையும் ஏற்படாது என்பதும் ஐதீகம். வீட்டில் குபேர பூஜையை வழிபடுவதற்கான முறையான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
குபேர பூஜை செய்வதற்கு முன்பு வீட்டை தூய்மை செய்து வாசலில் மாவிலை தோரணம் கட்டி பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். மகாலட்சுமி மற்றும் குபேரன் படம் அல்லது சிறிய விக்ரகங்களை ஒரு பலகையில் வைக்க வேண்டும். செம்பு அல்லது வெள்ளி தகட்டில் வரையப்பட்ட எந்திரம், 108 ஒரு ரூபாய் நாணயங்கள், செம்பு அல்லது பித்தளையாலான சிறிய குடங்கள் அல்லது செம்புகள், தேங்காய், மாவிலை, நிவேதனம் செய்வதற்கு சர்க்கரை பொங்கல், பாயாசம், கற்கண்டு, பால், பழங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், பூக்கள், அகல் விளக்குகள், ஊதுபத்தி, சாம்பிராணி ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
பூஜை அறையில் ஒரு மரப்பலகை வைத்து அதன் மீது நுனி வாழை இலை விரித்து, பச்சரிசியை பரப்ப வேண்டும். அதன் மேல் கலசம் வைத்து சுத்தமான நீர் விட்டு, ஒரு நாணயம், ஒரு ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை இடவேண்டும். கலசத்தின் மேல் மாவிலைகளை பரப்பி அதன் நடுவில் மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். கலசத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அருகில் லட்சுமி மற்றும் குபேரன் திருவுருவப் படங்களை வைக்க வேண்டும். பீடத்தின் முன்பாக குபேர கோலம் இட வேண்டியது ஐதீகம்.ஒ படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்ற கோலத்தை வரைந்து அதன் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும்.
பூஜையை தொடங்குவதற்கு முன்னர் மஞ்சளில் விநாயகர் பிடித்து, அருகம்புல் சாற்றி, “ஓம் கணபதயே நமஹ:” என்று கூறி பூஜையை தொடங்கவும். கையில் சிறிதளவு அட்சதை மற்றும் பூக்களை எடுத்துக்கொண்டு பெயர், நட்சத்திரம் கூறி, “வீட்டில் வறுமை நீங்கி, செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் குபேர பூஜை செய்கிறேன்” என்று மனதார வேண்டிக்கொண்டு வடக்கு பக்கமாக அட்சதையை இட வேண்டும். லட்சுமி குபேர பூஜையில் 108 நாணயங்களை ஒரு தட்டில் வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களை கூறி ஒவ்வொரு நாணயமாக விக்கிரகத்தின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.
"ஓம் யட்சாய குபேராய வைஷ்ரவணாய தனதான்யாதி பதயே தனதான்ய சம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா" இந்த மந்திரங்களை கூறி 108 முறை நாணயங்களால் அர்ச்சனை செய்வது வீட்டில் பண வரவை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமிக்கு உகந்த லட்சுமி அஷ்டோத்திரம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரம் வாசித்து மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அன்னைக்கு தாமரை மலர்கள் சமர்ப்பிப்பது மிகவும் விஷேசம்.
தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பொங்கல், பாயாசம், வெற்றிலைப் பாக்கு, பழங்களை நெய்வேதியம் செய்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். ஆரத்தியின் போது இந்த மந்திரங்களை சொல்ல வேண்டும். "செல்வம் தரும் லட்சுமியே போற்றி! நிதி தரும் குபேரனே போற்றி! எம்மைக் காக்கும் இறைவா போற்றி!" இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளைத் தரும்.
குபேர பூஜையின் போது வடக்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்வது அதிக பலன்களைத் தரும். அர்ச்சனை செய்ய பயன்படுத்திய 108 நாணயங்களை மஞ்சள் துணியில் முடிந்து பணப்பெட்டி அல்லது பணம் வைத்திருக்கும் இடங்களில் வைப்பது ஐஸ்வர்யத்தை நிலைக்க செய்யும். பூஜை முடிந்த பின்னர் ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்வது குபேரனின் அருளைப் பெற்று தரும். இந்த முறையைப் பின்பற்றி நீங்களும் பயபக்தியுடன் பூஜை செய்தால் உங்கள் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் குபேரனின் அருளும் என்றும் நிலைத்திருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)